நகருக்குள் வந்த 5 லாரிகளுக்கு அபராதம்;போக்குவரத்து காவல்துறை அதிரடி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருமுல்லைவாசல், தொடுவாய் ஆகிய பகுதிகளில் தனியார் சவுடு மண் குவாரிகள் இயங்கி வருகிறது. இந்த சவுடு மண் குவாரிகளில் இருந்து விழுப்புரம் - நாகை நான்கு வழிச்சாலை விரிவாக்கம் பணிகளுக்காக நாள்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் மணல் ஏற்றிச் செல்லப்பட்டு வருகிறது. இவ்வாறு சீர்காழி நகர் பகுதி வழியாக லாரிகளில் மணல் ஏற்றிச் லாரிகள் வேகமாக சென்று வருவதால் போக்குவரத்து இடையூறும் விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.குறிப்பாக சீர்காழி நகருக்குள் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும் மாலை 3 மணி முதல் 6 மணி வரையிலும் பள்ளி நேரங்களில் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் சென்று வர போக்குவரத்து காவல்துறை தடை விதித்துள்ளனர். அதனையும் மீறி சவுடு மணல் லாரிகள் செல்வதால் வாகன ஒட்டிகள், பெற்றோர்கள், பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வந்தனர். பள்ளி நேரங்களில் லாரிகள் சென்றுவர தடை விதிக்க வேண்டும் என பொதுமக்களும், பெற்றோர்களும் வலியுறுத்தினர்.அதனைத் தொடர்ந்து சீர்காழி போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளர் வேல்முருகன் தலைமையில் காவலர்கள் அண்ணாமலை மற்றும் போலீசார் தென்பாதி உள்ள தனியார் பள்ளி அருகே வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது பள்ளி நேரத்தில் நகரில் சென்று வந்து கொண்டிருந்த 5 மணல் லாரிகளை பிடித்து அபராதம் விதித்தனர். மேலும் இவ்வாறு தொடர்ந்து பள்ளி நேரங்களில் லாரிகள் சென்று வந்தால் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பரிந்துரையின் படி வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஓட்டுனர்களை எச்சரித்து அனுப்பினர். காவல்துறையினரின் இந்த நடவடிக்கையால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
What's Your Reaction?






