இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 12 பேர் விடுவிப்பு

தூத்துக்குடி அருகேயுள்ள தருவைகுளம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த அந்தோணி மகாராஜா, தென் டேனிலா ஆகியோரின் விசைப்படகுகளில் சென்ற 22 மீனவர்கள் இலங்கை கடல்பகுதியில் அத்துமீறி நுழைந்ததாக கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து, அவர்கள் அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.இவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் இந்திய தூதரகம் மூலம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. இதன் பலனாக, அந்தோணி மகாராஜா என்பவரது படகில் சென்ற 12 மீனவர்களை புத்தளம் நீதிமன்றம் விடுவித்து உத்தரவு பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து அந்த 12 மீனவர்களும் இலங்கையில் இருந்து வெள்ளிக்கிழமை மாலை விமான மூலம் சென்னை விமான நிலையத்துக்கு வந்தனர்.பின்னர், அங்கிருந்து கார் மூலம் தருவைகுளம் மீனவ கிராமத்திற்கு நேற்று வந்தடைந்தனர். இலங்கை சிறையில் இருந்து வந்த மீனவர்களை தருவைகுளம் மீனவ கிராம மக்கள் மற்றும் குடும்பத்தினர் கண்ணீர் மல்க வரவேற்றனர். மேலும், இலங்கை சிறையில் உள்ள மற்றொரு படகில் சென்ற 10 மீனவர்களையும் மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
What's Your Reaction?






