செல்போனில் படமெடுத்து காதல் ஜோடியிடம் பணம் கேட்டு மிரட்டல்; போலி வனத்துறை அதிகாரி கைது
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மலைராமர் கோவில் பகுதியில் ஒரு காதல் ஜோடி சுற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.அப்போது அதனை நோட்டமிட்ட இருவர், அந்த காதல் ஜோடியை தங்களின் செல்போனில் படம் எடுத்து அவர்களிடம் காட்டியதோடு தாங்கள் இருவரும் வனத்துறை அலுவலர்கள் எனவும் கூறி பணம் கேட்டு மிரட்டி உள்ளனர்.அப்போது அவர்கள் தங்கள் கையில் இருந்த 500 ரூபாய் பணத்தை கொடுத்துவிட்டு படத்தை அழிக்குமாறு காதல் ஜோடி கெஞ்சிய நிலையில் அதை அழிக்க வேண்டுமானால் தங்களுக்கு கேட்கும் போதெல்லாம் பணம் கொடுக்க வேண்டும் எனக் கூறி மேலும் 3000 ரூபாய் பணம் வாங்கியுள்ளனர். இந்நிலையில் சுதாரித்துக் கொண்ட காதல் ஜோடி, ஆலங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.இதையடுத்து புகாரின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், வனத்துறை அதிகாரிகள் எனக் கூறிய இருவரையும் விசாரிக்கச் சென்றுள்ளனர். அப்போது ஒருவர் தப்பியோடிய நிலையில், மற்றொருவரை போலீசார் சுற்றிவளைத்துப் பிடித்து விசாரணை நடத்தினர்.விசாரணையில், ஒருவர் ஆலங்குளம் அருகே உள்ள ஆலடிப்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்த தங்கசாமி (34) என்பதும், தப்பியோடியவர் கீழப்பாவூரை சேர்ந்த ஜெகநாதன் என்பதும் தெரியவந்தது.இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட தங்கசாமியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த போலீசார், தப்பியோடியவரை தேடி வருகின்றனர்.
What's Your Reaction?






