கர்ப்பிணி மனையை கொன்ற கணவன் தலைமறைவு; போலீஸ் வலைவீச்சு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாளவாடி தொட்டகாஜனூர் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் வயது 28. இவர் கூலித் தொழிலாளியாக உள்ளார்.இவருக்கும் இவரது மனைவி ஆஷாவிற்க்கும் கடந்த 5 வருடங்கள் முன்பு திருமணம் நடந்தது.இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் ஆஷா தற்போது மீண்டும் 5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.இந்நிலையில், ரமேஷ் மது குடித்துவிட்டு அடிக்கடி வீட்டில் மனைவி ஆஷாவுடன் தொடர்ந்து சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது.வழக்கம்போல் மது அருந்திவிட்டு வந்த ரமேஷ் தனது மனைவி ஆஷாவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது தன் கர்ப்பிணி மனைவி ஆஷாவை கடுமையாக தாக்கிவிட்டு வெளியே சென்றதை அடுத்து நீண்ட நேரம் ஆஷா வெளியே வராததால் உறவினர்கள் சந்தேகத்தின் பேரில் கதவை திறந்து பார்த்துள்ளனர். அப்போது ஆஷா மயங்கிய நிலையில் கீழே கிடந்துள்ளார். உடனடியாக ஆஷாவை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆஷாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர், ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மனைவி இறந்த தகவல் கேட்டு கணவர் ரமேஷ் தலைமறைவானார்.கர்ப்பிணியை தாக்கி கொலை செய்ததாக கூறி ஆஷாவின் உறவினர்கள் தாளவாடி அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து உறவினர்கள் போராட்ட்தை கைவிட்டு திரும்பினர். கர்ப்பிணி மனைவியை அடித்தே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?






